Blog Widget by LinkWithin

கருத்தரங்கம்

>> 10 February 2009

கணிணி மற்றும் இணையத்தமிழ் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம் 27,28.02.2009ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பதிவுக்கட்டணம் ஆய்வாளர்க்ளுக்கு 100 விரிவுரையாளார்களுக்கு 200.ஆகும்.கட்டுரை16.02.2009தேதிக்குள் அனுப்ப வேண்டும். முனைவர் இரா.குணசீலன் பகுதியில் கண்டது.

மேலும வாசிங்க...

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

>> 30 January 2009

ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பொறுக்க முடியாமல்
தன் இன்னுயிரைத் துச்செமென நினைத்துத் தீக்குளித்து உயிர் விட்ட
தோழர் முத்துகுமாரனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அண்ணாமலைப்
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் வகுப்புக்களைப் புறக்கணித்தனர்.தோழர் முத்துக்குமரனின் இறுதி ஆசை நிறைவேறுமா?

மேலும வாசிங்க...

செவ்வாடையில் ஒரு சமயப்புரட்சி

>> 26 January 2009

இந்து மதத்தின் வழிபாட்டு முறைகளில்,அம்மன் வழிபாடு என்பது காலப்பழமையுடையது. இருபதாம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளிப் புதைப்பொருள்களில் மூலமாக சக்தி வழிபாடு மிகத் தொன்மையானது என்பதை அறியலாம்.ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட கருவுயிருக்கும் இலச்சனை,சக்தி வழிப்பாட்டைக் குறிப்பதாக அறிஞர் கூறுவர்.சங்க இலக்கியத்தில் பாலை நில மக்கள் வணங்கிய கொற்றவை வழிபாடும் சக்தி வழிபாடுதான்.சங்க இலக்கியங்கள் கொற்றவையை ‘ஓங்கு புகழ் காமர் செல்வி’ என்றும் ‘வெற்றிவேல் போர் கொற்றவை’ என்றும் குறிப்பிடுகின்றன.அன்றைய மக்கள் கொற்றவையை வேண்டிய சக்தியைக் கொடுக்க கூடிய வெற்றி தெய்வமாகவே போற்றி வணங்கியுள்ளனர்.


சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சக்தி வழிபாடு காணப்பெறுகின்றன. காரைக்காலம்மையார் சிவனைப் போற்றிபாடும் பொழுது சக்தியினையும் பாடுகின்றார்.பல்லவர் காலத்தில் சக்தி வழிபாடு சைவத்துடன் இணைந்தே வளர்ந்து. சோழர் காலத்தில் இராஜராஜேஸ்வரி அம்மனையும், பாண்டியர் காலத்தில் மீனாட்சி அம்மனையும் வழிபட்டுள்ளனர்.சக்தியின் மீது ஈடுபாடு கொண்டு குமரகுருபர் சகலகலாவல்லிமாலையையும் அபிராமிபட்டர் அபிராமி அந்தாதியும் பாடியுள்ளனர்.

இவ்வாறு பழமைவாய்ந்த அம்மன் வழிபாட்டின் தொடர்ச்சி தான் இன்றைய மேல்மருவத்தூர் அன்னை அதிபராசக்தி வழிபாடு.1941-ஆம் ஆண்டு சென்னை யிலிருந்து 96 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேல்மருதூரில் திருவாளர் கோபால நாயகருக்கும்,திருவாட்டி மீனாம்பாள் அன்னைக்கும் அவதரித்தார் பங்காரு அடிகள். சாதரண கிராமமாக இருந்த மேல்மருவத்தூரை,அன்னை ஆதிபராசக்தியின் அருளால் பக்தித் திருத்தலமாக உருவாக்கினார் அடிகளார். அவ்வூரின் கண் அன்னை ஆதிபராசக்தி அடிகளார் உருவிலே ஆன்மீக குருவாக உலகம் நலமுடன் வாழ அருள்பாலித்து வருகிறாள்.
ஆதிபராசக்தி இயக்கமானது ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி, மாபெரும் இயக்கமாக வளர்ந்து ,உலகெங்கும் 4500 வார வழிபாட்டு மன்றங்களைக் கொண்டு,ஆன்மீக வழி நின்று அறச்சேவை செய்யும் சமுதாய சேவை கூடங்களக ஒளிர்கின்றது.

கோயில்களைச் தூய்மையாகவும் வைத்திருக்க முடியும் என்பதற்குச் சான்றாக விளங்கக் கூடியது அன்னை ஆதிபராசக்தி பீடம். அங்கு செல்லக்கூடிய செவ்வாடை அணிந்த ஒவ்வொரு ஆணும்,பெண்ணனும் ஊழியர்களாக மாறி தங்கள் இல்லம் போல் தூய்மை பேணுவதையும் அங்கு காணலாம்.நாம் காணக்கூடிய பிற கோயில்களில்,அக் கோயில்களில் ஊழியம் செய்யக்கூடிய ஊழியர்கள் பக்தர்களை எரிச்சலுடனும்,கடுமையானச் சொற்களாலும் சாடுவதைக் காணலாம்.ஆனால் மேல் மருவத்தூரில் அங்குள்ள செவ்வாடை ஊழியர்கள் மிக மரியாதையுடனும், கண்ணியத்துடனும் பக்தர்களிடம் நடந்துக்கொள்வதைக் காணலாம்.

தமிழ் நாட்டிலுள்ள கோயில்களில் தமிழ் முழங்க வேண்டும்,தமிழிலேயே வழிபாடு நடத்த வேண்டுமென எத்தனை எத்தனையோ போராட்டங்கள். நடைபெற்றது,ஆனால் தமிழக கோவில்களில் தமிழ் ‘வழிபாட்டு மொழியாக’ இல்லை,மக்களுக்குப் புரியாத மொழிதான் வழிபாட்டு மொழியாக இருக்கும் நிலை.ஆனால் மேல்மருவத்தூர் சக்தி பீடம் பெரும் புரட்சியே செய்து வருகின்றது.அங்கு மக்களுக்குப் புரிந்த இனிய தேஞ்சுவை தமிழ் மொழிதான் வழிபாட்டு மொழியாக விளங்குகின்றது.அங்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊரிலுள்ள சக்தி பீடங்களிலும் இம்முறையே கடைப்பிடிக்கப்பெறுகின்றது.
மற்ற கோயில்களில் காணமுடியாத அதிசயத்தை இங்கு காணலாம்.வேதங்களாலும் ஆகமங்களாலும் பெண்களுக்கு விதிக்கப் பட்ட சட்டங்கள் எதுவும் இங்கு கிடையாது. பெண்கள் கருவறை வரை செல்லலாம்,ஆதி பராசக்தியைத் தொட்டு வணங்கலாம்,பூசையும் செய்யலாம்.பெண்கள் விலக்கு நாள்களில் கூட உள்ளே சென்று அம்மனை வழிபடலாம்.பெண்களின் சுதந்திரமான ஆன்மீகத்தேடலுக்கு வழிவகுக்கின்றது மேல்மருவத்தூர் சக்தி பீடம்.

இப்பீடம் யாவரும் மனிதரே யாவரும் பக்தரே என்ற அடியினை நடைமுறை படுத்தும் இடமாக விளங்குகின்றது. சாதி,இனம்,மதம் பாகுபாடின்றி யாவரும் இங்கு வருகின்றனர் அன்னையின் திருவருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
அன்னை ஆதிபராசக்தியின் அருத் தலமாக மட்டுமல்லாமல் மருத்துவம் மற்றும் கல்வி மையமாகவும் திகழ்கின்றது.அங்கு அமைந்துள்ள ஆலயம்,பள்ளி, கல்லூரி,200 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனை ஆகியவை மேல்மருவத்தூரைச் சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுதும் உள்ள மக்களுக்கும் பயன்படுகின்றன.
மேல்மருவத்தூர் தூய்மைக்குச் சான்றாகவும்,பெண்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாத ஆன்மீக வழிபாட்டு மையமாகவும்,தாய்மொழி தமிழ் மொழியில் வழிபாடு முறையையும்,சாதி வேறுபாடு இன்றி அனைவரும் ஒரு குலம் எனக் கருதும் தன்மையையும் கொண்டு திகழ்வதைக் நோக்கும் போது செவ்வாடையில் ஒரு சமயப் புரட்சி நடைபெறுவதை அறியலாம்.

மேலும வாசிங்க...

குடியரசுத் தின வாழ்த்துக்கள்

இணைய நண்பர்கள் அனைவருக்கும் குடியரசுத் தின வாழ்த்துக்கள்.

மேலும வாசிங்க...

பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம்

>> 25 January 2009

பார்க்கும் இடங்களெல்லாம் பல்கலைக்கழகம் பார்வை சரியாக இருந்தால் என்பர் புலவர் இரா.இளங்குமரனார்.ஆம் நம்மை சுற்றி ,நாம் காணும் இடங்கள் அனைந்துமே நமக்கு ஏதோ ஒரு வகையில் பாடங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.அண்மையில் தஞ்சைக்கு அருகில் உள்ள ஒக்கநாடு கீழையூர் என்னும் ஊரில் 80 வயது மதிக்கதக்க

பெண்மணியைச் சந்தித்தேன்.அவர் 1920 இல் பர்மாவிலிருந்து இந்த ஊருக்கு வந்தவர்.அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அங்கு 8ஆம் வகுப்பு வரை படித்ததை நினைவு கூர்ந்தார்கள்.அவர்களிடம் பல செய்திகளை அறிந்து கொண்டேன்.பள்ளிக்குப் போனப் பின்னும் உணவு இடைவெளியின் போதும் ,மாலை வீடி திரும்பும் பொழுதும்,ஆசிரியர்களை எவ்வாறு வணங்கி விடைபெறுவார்கள் என்பதைக் கூறினார்கள்.இந்த வயதிலும் அவர்கள் படித்த

குமரேச வெண்பா ,நீதி நெறிகள்,கம்பராமாயணம் போன்றவற்றை நினைவி நிறுத்தி நன்கு கூறுகின்றார்கள்.அதற்கு அவர்கள் கூறும் காரணம் சிறுவயது முதற்கொண்டே பாடங்களை நன்கு மனனம் செய்ததே என்கிறார்.உரு போடாத மனம் உருப்படாது என்பார்கள் அது உண்மை தான் .ஆனால் இன்று மனனம் செய்வதே குறைந்து வருகிறது.

காலை வந்தவுடன்

காலையில் எழுந்திருந்து
கால்கை சுத்தம் செய்து
கோலமா நீர்கள் பூசி
குழந்தைகள் பசிகள் ஆற
பாடமும் படிக்க வந்தோம்
படியடி வாங்கி வந்தோம்
சீழனே அனுப்புமையா
திருவடி சரணம் தானே

உணவு இடைவெளிக்குச் செல்லும் முன்

சட்டம் சிரவே தானெழுதி
சரியா லக்கம் தொகை கூட்டி
இட்ட கணக்கும் வாசகமும்
எல்லா கணக்கும் தெரிந்து கொண்டோம்
பட்ட பகலே அடிதிரும்பி
பசியால் நாங்கள் வருந்துகிறோம்
திட்டம் பார்த்து அனுப்புமையா
திருவடி சரணம் தானே.

மாலை வீடு திரும்பும் முன்

அந்திக்குப் போறோம் நாங்கள்
அகத்தினில் விளையாடாமல்
சிந்தையாய் விளக்கு முன்னே
சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து
வந்த்து வராத்து எல்லாம்
வகையுடன் படித்துக் கட்டி
தொண்டமான் கோழி கூவ
கூப்பிட வாரோமையா
திருவடி சரணம் தானே.

மேலும வாசிங்க...

ஆசிரியப்பணி

ஆசிரியப்பணி என்பது மிகப் புனிதமான பணி.அங்கு நமது விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.ஒவ்வொரு மாணவர்களுமே நம்முடைய குழந்தையைப் போல நடத்த வேண்டுமே ஒழி,பிடித்த மாணவர்களிடம் ஒரு மாதிரியாகவும் பிடிக்காதவர்களிடம் ஒரு மாதிரியாகவும் நடந்து கொள்வது ஆசிரியர் பணிக்குச் சிறப்பில்லை.எனக்கு தெரிந்த ஒரு மாணவி.அவள் நன்கு படிக்க கூடியவள்.எல்லா ஆசிரியர்களிடமு நல்ல பெயரும் வாங்கியிருந்தாள்.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆசிரியர் ஒருவர் மட்டும்,அவளுடைய பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கிலே செயல்பட்டு,மற்ற ஆசிரியர்களிடம் இல்லாததை சொல்லி அவள் மேல் மற்றவர்களும் வெறுப்புக் கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்.இத்தகைய செயல் ஆசிரியர் தொழிலுக்கு நன்றா?தன்னுடைய மாணவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் அவர்களைத் தனியே அழைத்துத் திருத்துவது தானே ஆசிரியர் கடன்.இதனை ஏனோ அவர் மறந்தார்.மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒரு சிறந்த முன் மாதிரியாக இருக்க வேண்டும்

மேலும வாசிங்க...

வகுப்பு புறக்கணிப்பு

>> 21 January 2009

இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையில் போரினை நிறுத்தக் கோரி தங்களது வகுப்புக்களைப் புறக்கணித்தனர்.

மேலும வாசிங்க...

மொழிப் போரில் அண்ணாவின் மொழியாளுமை

>> 19 January 2009

குள்ள உருவம்; குறும்புப்பார்வை; விரிந்த நெற்றி; பரந்த மார்பு; கறைபடிந்த பற்கள்; கவலையில்லா தோற்றம்; நறுக்கப்பட்ட மீசை; நகை தவழும் முகம்; சீவாத தலை; சிறிதளவு வெளிவந்த தொப்பை; செருப்பில்லாத கால்; பொருத்தமில்லாத உடைகள்; இடுப்பில் பொடி மட்டை; கையில் வெற்றிலை பாக்கு பொட்டலம்; இத்தோற்றத்தோடு காட்சியளித்து நின்கிறாரே அவர்தான் அண்ணா, என நாவலர் நெடுஞ்செழியன் காட்சிப்படுத்தும், இந்த உருவம் தான் 1937 இன் தொடக்க காலக்கட்டங்களிலும்,பிந்திய காலங்களிலும் தாய் மொழி தமிழ் அழியும் நிலை ஏற்பட்ட பொழுது,‘ நம்முடைய தமிழ் மொழி பிழைத்தால்தான் நம்முடைய இனம் பிழைக்கும்! நம்முடைய நாடு நமக்குக் கிடைத்தால்தான் நாம் தலை நிமிர்ந்து வாழமுடியும்’எனச் தமிழ் சமுகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். அதன் விளைவாக எண்ணிறந்தோர் மொழிகாக்க வீறு கொண்டு எழுந்தனர்.அவ்வாறு அவர்கள் வீறுகொண்டு எழுவதற்குக் காரணம்,அண்ணாவின்,மொழியாளுமை என்றால் மிகையில்லை.

பழுத்த அறிவு,கூரிய அறிவு நுட்பம்,அகன்ற காட்சியறிவு அகியவை அவர் தம் நடையினை அணி செய்கின்றன.அவர் தம் ஆளுமையும் முனைப்பாகப் புலப்படுகின்றது. கருத்து முதன்மையும் முழுமையும் கருத்து வெளிப்பாட்டு விருப்பமும் அவர் தம் நடையின் தலைச்சிறந்த பண்புகள் எனலாம்.சுருக்கம்,தெளிவு,இனிமை,ஓசை நயம்,அறிவாழம் முதலியவை அவர் தம் நடையின் ஏனைய பண்புகளாம்.அத்துடன் அவர்தம் நடை ஒரு தனி வீறும் தனியாண்மையும் கொண்டது என்பர் அ.கி.மூர்த்தி (அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்,பக்கம்,8)
இந்தி எதிர்ப்பு

1937-1939 அப்பொழுது சென்னை மாகாணத்தின் (தற்போதைய தமிழகத்தையும், தெற்கு ஆந்திர பகுதியையும் உள்ளடக்கியது) முதலமைச்சராக இருந்த இராஜாஜி பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டுமென சட்டம் இயற்றினார். இந்த சட்டத்தை எதிர்த்துப் பலர் போராடினர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர் அறிஞர் அண்ணா ஆவர்.
அறிஞர் அண்ணா இந்தி எதிர்ப்பு ஏன்?,இந்தி எதிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல,வீட்டுக்கு ஒரு மறவர் வாரீர் நாட்டுக்குத் தன்னுயிர் தாரீர்!,விலங்கினை ஒழித்திட வீரனே விரைந்து வா!,தமிழ் அழிக்கும் ஆதிக்கம் இனியும் நீடிப்பதா?, மொழியைக் காக்கவும் நாட்டை மீட்டிடவும் விரைந்து வாரீர்!, தம்பியே வா ! தானையோடு வா!, போர் முரசு கொட்டிடுவோம் தார்வேந்தர் பரம்பரையே திரண்டு வா! என்னும் தலைப்புகளில் சொற்பொழிவாற்றி மக்கள் உள்ளத்துள் மொழிப்போரின் தேவையையும் அதை பற்றிய தெளிவினையும் உணர்த்தினார். .

கொண்ட கருத்தை உணர்த்தும் பாங்கு
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார் பெறின்(648)

என்னும் வள்ளுவ மொழிக்கேற்ப, அண்ணா பொதுமக்களிடம் தன் கருத்துருவை முன் வைக்கும் பொழுது, அவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம்,தமது கருத்தைத் தெளிவாக எடுத்துரைப்பர். 21-9-1957-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு ஏன்?என்னும் தலைப்பில் திருவண்ணாமலையில் சொற்பொழிவாற்றுகிறார். அச் சொற்பொழிவில் இந்தி எதிர்ப்பிற்கான காரணத்தை மிகத் தெளிவாக அவையோருக்கு அளிக்கின்றார்.

நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய் மொழி பிற மொழிகளுடன்,ஒப்பிட்டு பார்க்கின்ற நேரத்தில் மொழியாளர்கள் எல்லாம் பார்த்து இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது?இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றுள்ளீர்கள்?ஈராயிரமாண்டுக் காலமாகவா மொழி சிதையாமல் சீர்குலையாமல் இருந்து வருகிறது?ஆவலுடன் சிலரும் ஆயாசத்துடன் பலரும்,பொறாமையோடு சிலரும்,பொச்சரிப்பாலே பலரும் கேட்கத்தக்க நல்ல நிலையிலே தான் தமிழ் மொழி இருக்கின்றது.ஆகையாலே தமிழ்மொழிக்காக வாதாடுவதற்காக தமிழர் மன்றத்தில் தமிழன் பேசவில்லை.ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை நுழைக்கின்ற பேதமை,தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிறமொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமம் இவைகளை கண்டித்து அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றது.

இங்கே நாம் ஆயிரமாயிரம் கூடியிருக்கின்றோம்.நாம் வளர்ச்சியடைந் திருக்கின்ற இந்த நேரத்திலும் நம்மை உண்மையிலேயே அடக்கி ஆளவேண்டு மென்று கருதுகின்றவர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால்,அவர்கள் இருக்கின்ற திக்குநோக்கி நீங்கள் தமிழ்ப் பார்வையைக் காட்ட வேண்டும்.தமிழ்ப் பார்வையிலே குளிர்ச்சி உண்டு.கோபக்கனலும் உண்டு.தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான்,தோழன் என்று வருபவனுக்குது தமிழன்,தன்னுடைய தாளை மதிப்பவனை அவனுடைய தலைதாளிலே படுகின்ற வரை ஓயமாட்டான்.(பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்,பூம்புகார் பதிப்பகம், பக்கம்,711)

உவமை
அண்ணா தன்னுடைய கருத்தினைத் தெளிவுபடுத்த தனது பொழிவுகளில் உவமைகளைக் கையாண்டுள்ளார்.24-6-1960-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு-போராட்டம் மட்டுமல்ல என்னும் தலைப்பில் தியாகராய அரங்கில் உரையாற்றுகின்றார். அப்பொழுது இந்தியைத் திணிக்கவில்லை எனக் கூறிக் கொண்டே ஆட்சியாளர்கள் இந்தியைத் திணிக்கின்றார்கள் என்னும் கருத்தைக் கூறும்பொழுது ,

சிறுவர்கள் மருந்து சாப்பிட மறுக்கும்போது கொஞ்சம் இனிப்பை மருந்தில் கலந்து கொடுப்பது போல என்ற உவமையைத் தமது உரையில் கையாளுகின்றார்.
10-7-1960-ஆம் ஆண்டு மொழியைக் காத்திடவும் நாட்டை மீட்டிடவும் வீரர்களே விரைந்து வாரீர் என அண்ணா விடுத்த மொழிப்போர் அறை கூவலில் , முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலே எனக்குத் திருமணம் ஏற்பாடாகி, என்னுடைய மனைவியை ஊர்வலமாக அழைத்து வந்தார்கள்;அப்போது ஒரு குறும்புக்கார நண்பர் என்னிடத்திலே ஓடோடி வந்து,உன்னுடைய மனைவி சுத்தக் கறுப்பு என்று சொன்னார்;அவர் அவ்வாறு சொன்னதாலே,உருவத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்குத் தோன்றியது.உடனே என்னுடைய மனைவியைப் பார்த்தபோது,அவர் சொன்ன மாதிரி கறுப்பாக இல்லாமல் நல்ல சிவப்பாக இருந்ததோடு
மட்டுமல்லாமல்,அழகாகவும் இருந்தாள்.அதைப்போல காங்கிரசுகாரர்கள் எங்களைத் திட்டுவதாலே,ஆபத்தானவர்கள் என்று சொல்வதனாலே மக்களுக்கு எங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு,நம்முடைய கூட்டத்திற்கு ஏராளமாக வந்து கூடுகின்றார்கள்.என்றும் வாழ்கை நிகழ்வினை உவமையாக்கியுள்ளார்.
வீரச் சுவை

7-8-1960 இல் போர் முரசு கொட்டிவிட்டோம்;தார்வேந்தர் பரம்பரையே திரண்டு வா ! என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றும் பொழுது, அண்ணா அவையோரின் உள்ளத்துள் பதியுமாறும்,எழுச்சி ஏற்படும் வகையிலும் மொழிப்போரின் இன்றியமை யாமையை விளக்கி, இன்னுயிரை ஈந்தாவது தமிழ் நலம் காக்க வேண்டுமென மக்களை நோக்கி எழுச்சியுரையாற்றுகின்றார்.

ஆட்சியினர் ஏவுகின்ற அடக்குமுறைக்கு ஆளாக அழைக்கின்றேன், தேவைப்பட்டால் உயிர் இழக்கச் சம்மத்திக்கவே அழைக்கின்றேன்.கண்களை இழக்க நேரிடலாம்;உயிரை இழக்க நேரிடலாம்;அதற்காகவே அழைக்கின்றேன்,இப்படி அழைப்பு விடுத்தால் நான் கல்நெஞ்சகாரன்தான்!

‘இன்னுயிரை ஈந்தாவது தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்ற நம்பிக்கை உள்ளத்துள் எழவேண்டும். போராட்டத்தின் போது போலிசார் அடக்குமுறை அவிழ்த்துவிட்டால்,போலிசாரின் காலால் எட்டி உதைக்கப்பட்டால்,குருதி குளமானால் அந்த மண் மகிமை பெறவேண்டும்.இரத்தம் பாய்ந்து புதுபுரியாக வேண்டும் நாம் நடத்துகின்ற போராட்டம் நாட்டு விடுதலைக்காகவும் மொழிக்காகவும்தான்’
.
தூத்துக்குடியிலே கால் இழந்துபோல,டால்மியா புரத்திலே கையிழந்தது போல, நெல்லிகுப்பத்திலே உயிரிழந்ததுபோல, சென்னையிலே படுகொலைக்கு ஆளானது போல, நேருக்கு கறுப்புக்கொடி காட்டிய நேரத்திலே சிக்குண்டு மாண்டது போல நான் என்ன தருவது-கைகளையா,கால்களையா,அல்லது உங்களுடைய இன்னுயிரையா?( 27-6-1960 இல் விலங்கினை ஒடித்திட வீரனே விரைந்து வா!)

குடும்பம் குடும்பமாக வாருங்கள் அண்ணனோடு தம்பியும் சுற்றமோடு நண்பரும் கூடி ஓடி வாருங்கள்!போராட்டக் களத்திற்கு!உங்களோடு வரமுடியாத அளவுக்கு தள்ளாத வயதுடைய பாட்டியும் கூட உங்களைத் தேடி வரவேண்டும் களத்திற்கு.தண்டூன்றித் தள்ளாடியவாறு உங்கள் பாட்டன்மாரும் பாடி நோக்கி வருகின்ற தன்மையிலே தாயகம் மீட்க அனைவரும் வாரீர்!வாரீர்.( 19-7-1960 ஆம் ஆண்டு தம்பியே வா! தானையோடு வா!)

இழைத்துணர்ந்தவர்

அண்ணா நூற்புலமையும்,பட்டறிவு புலமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்றதால், சொற்களின் திறன் அறிந்து,சொல்லும் முறையறிந்து, சொற்களால் விளையும் பயன் அறிந்து தன் கருத்தை மக்களிடம் வெளிப்படுத்தினார். அதனால் தான் அண்ணாவினுடை மொழி நடை பிறரினும் தனித்துவம் மிக்கதாக விளங்குகின்றது. ஒருமுறை அண்ணவினுடைய கூட்டத்தைக் கலைக்க ஏற்பாடு செய்யபட்ட பயில்வான், அவருடைய பேச்சு திறத்தால் கவரப்பட்டு அச் செயலை செய்யாமல் கைவிட்டதை இந்தி போராட்டம் மட்டுமல்ல என்னும் தலைப்பில் பேசும் பொழுது எடுத்துக்காட்டுகின்றார்.(24-6-1960,இந்தி எதிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல)

பேச்சுக்கலையில் ஈடு இணையற்றவர் அண்ணா.தம் பேச்சு பெருமையுற எல்லா வகை இலக்கிய நயங்களையும் அவர் கையாளுகின்றார்.உவமை,உருவகம், அடுக்குமொழி,சொல்திறம்,மேற்கோள் மொழிகள் முதலியவை அந்நயங்கள். உவமை யும், உருவமும்,அடுக்கு மொழியும் அண்ணா உரையிலிருந்து பிரிக்க இயலாதவை. அண்ணாவின் மொழி வனப்பும்,வண்ணமும்,வீறும் உடையது.தம் ஆழ்ந்த படிப்பால் வியத்தகு முறையில் அவர் மொழிகளைக் கையாளுகின்றார்.(அறிஞர் அண்ணா, சு.சண்முகசுந்தரம்,பக்கம்128)

அண்ணா தம் பேச்சு திறத்தால்,மொழி நடையால் தமிழுலக மக்களின் படித்தவரிலுருந்து பாமர் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் வெளிப்படுத்தி ,அவர்கள் உள்ளத்துள் புதிய எழுச்சியை ஏற்படுத்தி,புதிய சிந்தனைக்களுக்கு வித்திட்டார்.அவ்வித்து வளர்ந்து கிளை பரப்பி வளர்ந்திருந்தாலும்,அழிவுறாமல் காப்பது இளைய சமூகத்தினரின் கடனே.

மேலும வாசிங்க...

குமரகுருபரின்-மீனாட்சியம்மை குறம்

>> 11 January 2009

தென்பாண்டியில் உள்ள தென்கைலாயத் தலத்தில்,வேளாளர் குலத்தில் திருவாளர் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும்,திருவாட்டி சிவகாமியம்மையாருக்கும் மகவாய் தோன்றியவர் குமரகுருபர்.ஐந்து வயதுவரை ஊமையாக இருந்து,முருகன் அருளால் பேசும் திறனைப் பெற்ற குமரகுருபர்,முருகன் மேல் முதன்முதலில்’கந்தர் கலிவெண்பா’ என்ற நூலை அருளினார்.அதன் பிறகு மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துசுவாமி பிள்ளைத்தமிழ்,மதுரைக்கலம்பகம்,நீதிநெறி விளக்கம்,மதுரை மீனாட்சியம்மை குறம் போன்ற பல புகழ் பெற்ற இலக்கிய வகைகளைத் தமிழுலகுக்கு வழங்கியுள்ளார். அவற்றுள் மதுரை மீனாட்சியம்மை குறம் 51 பாடல்களைக் கொண்டு,இலக்கிய நயத்துடனும்,பக்தி செறிவாயும் இலங்குகின்றது. இந்நூல் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

குறம்-குறவஞ்சி
.தொன்மையில் வழங்கிவந்த குறி சொல்லும் வழக்கமே பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக எழுந்தது என்றும், சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான கலம்பக உறுப்புகளுள் ஒன்றாக இருந்த குறம்,பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியமாக மலர்ந்தது என்றும் கூறுவர்.ஒரு குறத்தி குறி கூறுவதாக அமையும் பிரபந்தம் குறமென்றும் வழங்கும் என்பர் உ.வே.சா.குறத்தி ஒருத்தியின் கூற்றோடு வேறு பலர் கூற்றுக்களும் உள்ள நூல் குறவஞ்சி எனப்படும் என்பர் மொ.அ.துரை அரங்கசாமி.பொதுவாக தலைவன் உலா வரும்பொழுது அவனைக் கண்ட தலைவி
காதலுற்று,வருந்தும்பொழுது அதனை ஆற்றுவிக்குமாறு குறத்தி தலைவிக்குக் குறி கூறுவதைக் குறம் எனவும்,குறத்திப் பாட்டு எனவும்,குறவஞ்சி எனவும் வழங்கலாம்.
இவ்வாறு பாடப்படும் குறமாவது இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தில் நிகழ்ந்தவற்றை அறிந்து,சிறந்த வகையில் அமைத்துப் பாடுவது எனப் பன்னுருப்பாட்டியல் இலக்கணம் கூறுகின்றது.
‘இறப்பு நிகழ்வு எதிர் என்னும்முக் காலமும்
திறம்பட உரைப்பது குறத்திப்பாட்டே’
மீனாட்சியம்மை குறம்-அமைப்பு
மீனாட்சியம்மை குறம் மதுரைச் சொக்கநாதர் மீது காதல் கொண்ட அங்கயற் கண்ணியம்மைக்குக் குறத்தி குறி கூறுவதாக அமைத்துப் பாடப்பெற்றுள்ளது.இக் குறம் விநாயகர் காப்புடன் தொடங்குகின்றது.பிறகு குறத்தி குறி கூறும் முறையறிந்து,அதன் வழி தன்னுடைய நாட்டுவளம்,முன்னோர் சிறப்பு போன்றவற்றைக் கூறி, எண்ணிய எண்ணம் நிறைவேறக்கூடிய நன்னிமித்தம் வாய்த்துள்ளதாக கூறுவதாக அமைந் துள்ளது.இறுதியாக உள்ள இருபது கண்ணிகள் அங்கயற்கண்ணியம்மையைப் போற்றி பரவுவதாக அமைந்துள்ளன.
குறிசொல்ல தொடங்கும் முன்
மீனாட்சியம்மை குறத்தில் குறி சொல்ல தொடங்கும் முன் குறத்தி ,தரையை மெழுகிக் கோலமிட்டு,பிள்ளையார் பிடித்து வைத்து,அதற்கு நிறைகுடம் வைத்து, நிறைநாழியால் நெல்லளந்து வைத்து,விளக்கேற்றி வைத்து,பலவகையான பொருட்களை வைத்து வழிபட்டு,பிறகு அங்கயற்கண்ணியம்மையின் கையைப் பார்த்து குறி கூறத் தொடங்குகின்றாள்.
புழிகாலே தரைமெழுக பிள்ளை யார்வை
பொற்கோலம் இட்டுநிறை நாழி வையாய் (6)
குறத்தி குறி சொல்வதற்காக ஆடையினையும் ஒருகாசினையும் கேட்கின்றாள்.இவ் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருப்பதைக் காணலாம்.
தூசுமொரு காசும்வைஉள் நேசம் வரவே சொல்லநான்
மற்ற குறவஞ்சிகளில் வரும் குறத்தி பல கடவுள்களையும் மனதில் எண்ணி குறி சொல்ல ,மீனாட்சியம்மை குறத்தில் வரும் குறத்தி அங்கயற்கண்ணமையை மட்டும் மனதுள் உள்ளி குறி கூறத்தொடங்குகின்றாள்.
இயற்கை வளம்
சங்க இலக்கியம் தொட்டு இக்கால இலக்கியம் வரை இயற்கையைப் பாடதா கவிஞர் இல்லை.சங்க மக்கள் இயற்கையைத் தெய்வமாகவே வழிப்பட்டனர்.இவ் இயற்கை இன்பத்தில் தோய்ந்த குமரகுருபரும் தன் மீனாட்சி குறத்தில் மலை வளத்தினைக் குறத்தியின் வாயிலாக எழிலுறச் சித்தரிக்கின்றார்.குறத்தி தான் வாழும் மலையின் உயர்ச்சியினை,
திங்கள்முடி சூடுமலை தென்றலை விளை யாடுமலை
எனப் போற்றுகின்றாள்.மேலும் மலையின் வளத்தினை செந்நெல் முத்தும் கன்னல் முத்தும் ஒளிதிகழ் மதுரை அங்கயற்கண்ணமை பொன்னும் முத்தும் சொரியும் வெள்ளருவி பொதியமலை என்றும் கனக நவமணி விளையும் மலை என்றும் தன் பொதியமலை வளத்தினைக் கூறுகின்றாள்.
பொதியமலையில் வாழக்கூடிய விலங்கினங்கள் எவ்வித பகையுணர்வும் இல்லாமல் இணைந்து இன்புற்று வாழுகின்றன என்பதைப் பதிவு செய்து,அதற்கு அம்மையின் அருளே காரணம் என்கின்றாள் குறத்தி.மலையில் ஒருபால் சிங்கமும் யானையும் இணைந்து விளையாடும்;ஒரு பக்கம் சினப்புலியும் மானும் களித்திருக்கும்;வேறொருபால் வெங்கரடி மரையினோடு விளையாடும்;மற்றொரு புறம் துன்பத்தைத் தரக்கூடிய பாம்பும் மடமயிலும் விருந்தயருகின்றன.
சிங்கமும் வெங்களிறுமுடன் விளையாடும் ஒருபால்;
சினப்புலியும் மடப்பிணையும் திளைத்திடும் அங்கொருபால்;
வெங்கரடி மரையினொடும் விளையாடும் ஒருபால்;
விடரவும் மடமயிலும் விருந்தயரும் ஒருபால்;
அங்கணமர் நிலம்கவிக்கும் வெண்க விகை நிழல்கீழ்
அம்பொன்முடி சூடும்எங்கள் அபிடேக வல்லி
செங்கமலப் பதம்பரவும் கும்பமுனி பயிலும்
தென்பொதிய மலைகாண்மற்று எங்கள்மலை அம்மே! (16)



குறவர்களின் பழக்கவழக்கம்
மீனாட்சியம்மை குறத்தின் மூலமாக,நானில மக்களுள் ஒருவர்களான குறவர்களின் பழக்கவழக்கங்கள் அறியமுடிகின்றது.சங்க இலக்கியங்களிலும் குறவர்கள் பற்றிய செய்தி மிகுதியாக காணப்பெறுகின்றன.குறவர்கள் தேனையும் கிழங்கையும் விற்றுப் பண்ட மாற்றாக,மீன் நெய்யினையும் நறவையும் பெறுவர்.உடும்பிறைச்சியோடு, கடமான் தசை,முள்ளம் பன்றியின் ஊன்,மூங்கி குழாயில் ஊற்றி வைத்த தேனிறல்,நெய்யால் செய்த கள்,புளிப்புச் சுவையுடைய உலையாக ஏற்றி ஆக்கிய மூங்கிலரிசிச் சோறு,பலாவிதையின் மாவு ஆகியவற்றை நல்கி மலைவாழ்நர் விருந்தோம்புவர் என மலைப்படுகடாம் கூறும்.இதே நிலையினை மீனாட்சியம்மை குறத்திலும் காணமுடிகின்றது.குறவர்கள் செழித்த கொடியிலிருந்து வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்து உணவாக உட்கொள்கின்றனர்.மலையின்கண் உள்ள குறிஞ்சி மலரை முல்லைக் கொடியில் வைத்துத் தொடுத்தும்,பசுந்தழையையும் மரவுரியையும் ஆடையாக உடுத்திக் கொள்கின்றனர்.விருந்தினருக்கு தேனும்,தினையும் வழங்கி விருந்தோம்புகின்றனர்.
கொழுங் கொடியின் விழுந்தவள்ளி கிழங்கு கல்லி எடுப்போம்;
குறிஞ்சிமலர் தெரிந்து முல்லைக் கொடியில் வைத்துது தொடுப்போம்
பழம்பிழிந்த கொழுஞ்சாறும் தேறலும் வாய் மடுப்போம்;
பசுய்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம்;
செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம்;
சினவேங்கைப் புலித்தோலின் பாயலிற்கண் படுப்போம்;
எழுந்து கயற்கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம்
எங்கள்குறக் குடிக்கு அடுத்த இயல்பு இதுகாண் அம்மே! (18)
முன்னோர் குறிச்சிறப்பு
மீனாட்சியம்மை குறத்தில், குறத்தி தன்னுடைய குறியின் சிறப்பைக் கூறத் தொடங்கும் பொழுது,தன் முன்னோர் கூறிய குறி பலித்த திறத்தினை இயம்புகின்றாள். அவளுடைய பாட்டி பூமகள் மாயவன் மார்பில் பொலிவள் என்று சொன்னதும்,தன் பெரிய தாய்,கலைமகள் மலரயனார் திருநாவில் வாழ்வாள் என்று சொன்னதும்,தன் நற்றாய் சுந்தரி இந்திரன் தோள் பெறும் என்றதும் தன் சிறியதாய் சொன்ன குறிக்கு அளவில்லை என்றும் குறிப்பிட்டுப் பின் தன்னுடைய குறிச்சிறப்பைக் கூறத் தொடங்குகின்றாள்.
பொற்றொடிவள் ளிக்குஇளைய பூங்கொடியென் பாட்டி
பூமகள்மா யவன்மார்பில் பொலிவாள்என்று சொன்னாள்
மற்றவள்பெண் களில்எங்கள் பெரியதாய் கலைமான்
மலர்அயனார் திருநாவில் வாழ்வாள்என்று சொன்னாள்
பெற்றெங்கள் நற்றாயும் சுந்தரிஇந் திரனுதோள்
பெறும் என்றாள் பின் எங்கள் சிறியதாய் அம்மே
சொற்குறிக்கு அளவுஉலைஎம் கன்னிமார் அறியச்
சொன்னேன்பொய் அலநாங்கள் சொன்னது சொன்னதுவே

கிளைச் சிறப்பு
முருகனுக்குக் குறக்குல வள்ளியை மணமுடித்தமையின்,முருகனின் தந்தையான சிவபெருமானையும் குறவனாகக் கூறும் இயல்பினைக் குறத்தினில் காணமுடிகின்றது.
வெள்ளி மலைக் குறவன்மகன் பழனிமலைக் குறவன் எங்கள்
வீட்டில் கொண்ட வள்ளிதனக் கேகுறவர் மனலமாட்சி சீதனமா வழங்கினாரால்
இப்பாடலில் சிவனை வெள்ளிமலைக் குறவன் எனச் சுட்டப்படுவதைக் காணலாம்.
குறி கூறுதல் இன்றும் வழக்கில் இருப்பதைக் காணலாம்.இலக்கியங்களின் வழி அவற்றை அறியும் பொழுது அன்று அவர்கள் குறி சொல்வதற்குப் பின்பற்றிய நெறிமுறைகளையும், அவர்களுடைய வாழ்வியல் முறைகளையும்,பக்தி நெறிகளையும் அறியமுடிகின்றது.

மேலும வாசிங்க...